உலகம் ஒருபோதும் காட்டாட்சிக்கு திரும்பி விடக்கூடாது’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் மறைமுகமாக சாடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டாம் உலகப் போரில் ஜப்பானை தோற்கடித்ததன் 80ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணி வகுப்புக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் தலைமை தாங்கினார்.
இதன்போது சீன ஜி ஜின்பிங் பேசியதாவது:
வலிமையானவர்கள், பலவீனமானவர்களை வேட்டையாடும் காட்டாட்சிக்கு உலகம் ஒருபோதும் மீண்டும் திரும்பி விடக் கூடாது. சீனாவின் வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது.
அச்சுறுத்தவும் முடியாது. உலக அமைதி மற்றும் வளர்ச்சிக்கு சீனாவின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.
ஜப்பானுக்கு எதிரான இரண்டாம் உலகப் போரின் வெற்றி நவீன காலத்தில், வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக சீனாவின் முதல் வெற்றியாகும்.
உலக அமைதி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பதில் சீன மக்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஒருவருக்கொருவர் சமமாக, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும். இவ்வாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
சீனாவின் இந்த இராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தபோது அதற்கு அழைக்கப்படாத அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளத்தில் தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.
அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்து கொண்டிருக்கும் உங்களுக்கும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.