தற்போதைய காலகட்டத்தில் அரசாங்கம் எந்தவொரு நாணய அச்சிடலிலும் ஈடுபடவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (19) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு பிரதி அமைச்சர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 1.2 ட்ரில்லியன் ரூபாய் அச்சிடப்பட்டுள்ளதாக அமைப்பு ஒன்று தெரிவித்த அறிக்கை வேண்டுமென்றே அல்லது அறியாமையால் வெளியிடப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கு நாணயத்தை அச்சிட முடியாதென்றும், அதற்கு சட்டப்பூர்வ அடிப்படை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் கையிருப்பினால் நாணய விரிவாக்கம் நிகழ்ந்துள்ளதாகவும், அது அரசாங்கத்தின் நாணயத்தாள் அச்சிடல் அல்ல என்பதுடன், இது சமூகத்தை முற்றிலும் தவறாக வழிநடத்துவதாக அமைந்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் 1.6 ட்ரில்லியன் நாணய இருப்பு உள்ளதுடன், பரந்த பண விநியோகம் 15 ட்ரில்லியனை நெருங்கியுள்ளது.
எனவே இந்த பரந்த பண விநியோகத்தின் வளர்ச்சியானது மத்திய வங்கியின் தலையீட்டால் ஏற்பட்ட ஒன்றாகும் என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.