அரசியல்உள்நாடு

வடக்கு கிழக்கு மக்கள் ஹர்த்தாலை நிராகரித்து அரசியல்வாதிகளுக்கு நல்ல செய்தி சொல்லியுள்ளார்கள் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (18) ஹர்த்தால் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிலையில், அது வடக்கு, கிழக்கு சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்த ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அறிவிப்பையும், முஸ்லிம் காங்கிரஸின் போக்கையும் மக்கள் நிராகரித்து உள்ளார்கள்.

இனிவரும் காலங்களிலாவது மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை அரசியல் கட்சிகள் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்ற செய்தியே இந்த ஹர்த்தால் போராட்ட நிராகரிப்பு என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஸ்தாபகரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும், தான்தோன்றித்தனமாகவும், சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கு மக்களை பலிகொடுக்காமல் மக்களின் பிரச்சினைகள், அபிலாஷைகள், உரிமைகள், உடமைகளுக்கான போராட்டங்களில் ஜனநாயக வழியில் அரசியல் கட்சிகள் தீர்வை பெற முன்வர வேண்டும்.

சிங்கள,தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இல்லாது ஜனநாயகத்தின் பக்கம் நின்று உண்மைக்கும், சத்தியத்திற்கும் துணை நிற்கவேண்டியது அரசியல்வாதிகளின் கடமையாகும் என்பதை இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பான்மையான மக்கள் தமிழசு கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்றவர்களுக்கு செய்தியாக சொல்லியுள்ளார்கள்.

தமிழர்களுக்கு இராணுவ பிரச்சினை என்றால் இலங்கைக்கு இஸ்ரேலியர்களின் சபாத் இல்ல பிரச்சினை இருக்கிறது. இதில் தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்பட வில்லை.

இன்றும் தமிழசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதை வலியுறுத்தியும் அது தொடர்பில் மு.கா வாய்திறக்காமல் இருப்பது வெட்கப்பட வேண்டியது. நடப்பவற்றை நோக்கும் போது இராணுவத்தையும்- முஸ்லிங்களையும் மூட்டிவிட்டு முஸ்லிங்களை பலிகொடுக்க நடத்தப்படும் மொஸாட்டின் சதிதான் இவ்வாறான போராட்டங்களின் பின்னணியோ என்ற சந்தேகம் எழுகிறது.

வடக்கில் விடுதலை புலிகளினால் கையகப்படுத்தப்பட்ட முஸ்லிங்களின் காணிகள் மீண்டும் முஸ்லிங்களுக்கு கையளிக்கப்பட வேண்டும். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிங்களை மீளகுடியமர்த்தப்பட வேண்டும். வடக்கு- கிழக்கில் பறிக்கப்பட்ட முஸ்லிங்களின் காணிகள், உரிமைகள், உடமைகள் முஸ்லிங்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.

அதுபோன்று பாதிக்கப்படும் சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நியாயம் வேண்டி ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது தீர்வை வலியுறுத்தி ஹர்த்தால் முன்னெடுத்திருந்தால் அதில் நியாயம் இருந்திருக்கும் மொத்த வடக்கு கிழக்கு மக்களும் ஒத்துழைப்பு நல்கியிருப்பார்கள்.

அப்படி இல்லாது மக்களின் முதுகிலேறி அரசியல் செய்ய முனையும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் இன்று போல எப்போதும் பாடம் நடத்த தயங்க மாட்டார்கள்.

நாட்டில் சமாதானத்தை நிலைநாட்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எப்போதும் முனைப்புடன் செயற்படுகிறது என்பதையும் மக்களின் எண்ணத்தின் ஓட்டம் என்ன என்பதை நாங்கள் அறிந்து வந்திருந்ததால் தான் மக்களை பற்றி துல்லியமாக பேச முடிகிறது என மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

ரயில் போக்குவரத்து தொடர்பில் வெள்ளியன்றே தீர்மானம்

பாராளுமன்ற செயற்குழு கூட்டம் திங்களன்று

கடன் மறுசீரமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத மஹிந்த, சஜித் அணி முக்கியஸ்தர்கள்!