அரசாங்க பாடசாலைகள் மூடப்படமாட்டாதென்றும் ஐம்பது மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் கல்விக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்படுகிறதே தவிர, பாடசாலைகளை மூடி விடுவது அரசின் நோக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பாடசாலைகளை நடத்திச் செல்லும் நடவடிக்கைகளை கல்வியமைச்சினால் மட்டும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (05) ரவி கருணாநாயக்க எம்.பி வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில், எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:
பாடசாலைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது மக்கள் பிரதிநிதிகள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு, பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்தே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பங்களில், சில வேளைகளில் 50 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பிலும் ஆராயப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.