அரசியல்உள்நாடு

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்ட தகவல்

மாகாண சபைகள் தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான ஒருசில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே இதற்கமைய அமைச்சு மட்டத்தில் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று மாகாண சபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்குரிய சூழலை அரசாங்கம் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ள விடயம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் தேர்தலை நடத்துவதற்கு கடந்த மாதங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் அமைச்சுசார் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாகாண சபைத்தேர்தல்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா முன்வைத்த திருத்த யோசனை மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த தனிநபர் பிரேரணை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு மதிப்பளித்து தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினோம்.

மாகாண சபை முறைமையில் காணப்படும் ஒருசில சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும்.

குறுகிய அரசியல் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்பட்டால் அது நிர்வாக கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மாகாண சபை முறைமை குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.

Related posts

தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழு கலந்துரையாடலில்

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்

ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor