ஈரான் மீதான 12 நாள் யுத்தம் குறித்து சவூதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் காலித் பின் சல்மான் அல் சவுத்தும் ஈரானிய ஆயுதப்படைகளின் பிரதான தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவியும் நேற்று (29) தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது, அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிக்காது ஈரான் மீது யுத்தத்தைத் திணித்தன.
ஈரானின் அணுசக்தி தொடர்பில் அமெரிக்காவுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் மறைமுகப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற சூழலிலேயே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன என ஈரானிய தளபதி குறிப்பிட்டுள்ளார்.
போரைத் தொடங்கிய தரப்பினர் நாங்கள் அல்லர். என்றாலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுத்தோம். தற்போதைய போர் நிறுத்தம் உட்பட எதிரியின் உறுதிமொழிகள் தொடர்பில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
அதனால், ஈரான் மீது மீண்டும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயம் சவூதி பாதுகாப்பு அமைச்சர், ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புச் செயல்களைக் கண்டித்ததோடு இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதிகளுக்கு தமது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
-தஸ்னிம் நியூஸ்