கொழும்பு மற்றும் அதனை அண்மித்த காணிகளில் அதிக தொகை மதிப்புள்ள வீட்டுத் தொகுதிகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளை நிர்மாணித்துள்ளதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் ஆறு பேர் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
திடீரென இதுபோன்ற சொத்துகள் உடைமையாவது பாரதூரமான சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயம் என்பதால் அதுதொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகள், கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி ஆகிய அதிக சனத்தொகைகொண்ட பிரதேசங்களில் இந்த பல்பொருள் அங்காடிகள் நிர்மாணிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றுக்கு பலகோடி ரூபா நிதி எவ்வாறு செலவு செய்யப்பட்டிருக்கலாமென்பது இரகசியமாகவிருப்பதாகவும் கூறப்படுகிறத.
குறித்த அரசியல்வாதிகள் ஆறு பேரில் பெரும்பான்மையானவர்கள் இந்நாட்டின் முதல்நிலை அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளதாகவும் இதுதொடர்பில் மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சிரேஷ்ட விசாரணை அதிகாரியொருவர் தேசிய பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசியல்வாதிகளுக்குரிய வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.