இரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன,” என்று அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது.
ஃபோர்டோ ‘தகர்க்கப்பட்டுவிட்டது’
“ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது” என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார்.
“இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்” என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.
“இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
அமெரிக்காவுடன்முழு ஒருங்கிணைப்பு – இஸ்ரேல்
இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் “முழு ஒருங்கிணைப்பில்” இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இரான் பதில்
அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார்.
டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான்
இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, “ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது” என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது.
இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, “நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்” என்று கூறியுள்ளார்.
இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.