அரசியல்உள்நாடு

முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி அதிரடியாக கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுக் (07) கைது செய்யப்பட்டார்.

அவருக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

தொழிலதிபரான இவர் பல ஆண்டுகளாக உள்நாட்டு இறைவரி திணைகளத்துக்கு ரூ. 700 மில்லியனுக்கும் அதிகமான வருமான வரியை செலுத்தத் தவறியது தொடர்பாக வழக்கு எண் 495/08/20 இன் கீழ் 2020 இல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கிரீன் லங்கா டிராவல்ஸ், கிரீன் சீட் லங்கா மற்றும் கிரீன் இலங்கை ஷிப்பிங் ஆகியவற்றின் பணிப்பாளராகப் பணியாற்றியபோது சம்பாதித்த வருமானத்துக்கு அவர் வருமான வரி செலுத்தத் தவறிவிட்டார்.

பல ஆண்டுகளாக வருமான வரித் துறைக்கு செலுத்தப்படாத வரிகள் தொடர்பாக அவருக்கு பல சந்தர்ப்பங்களில் ஏராளமான அழைப்பாணைகள் அனுப்பப்பட்டன.

இருப்பினும், அந்த அறிவிப்புகளை அவர் புறக்கணித்து வருவதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தொழிலதிபருக்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் எண் 09 இல் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கொழும்பு உயர் நீதிமன்றமும் அவருக்கு மூன்று அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.

குஷானி தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்ததால், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திறந்த பிடிவிறாந்தும் பிறப்பிக்கப்பட்டது.

அவருக்கு எதிராக திறந்த பிடியாணை இருந்தபோதிலும் குஷானியைக் கைது செய்வதை பொலிஸார் தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதால், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு நீதிமன்றம் நேரடி உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, அவரைக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அந்த உத்தரவின் பேரில், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த குஷானியைத் தேடும் விசாரணையின் ஒரு பகுதியாக, கொழும்பு நாரஹேன்பிட்டி, மங்கள மாவத்தையில் உள்ள ஒரு வீட்டை பொலிஸார் சோதனை செய்தனர்.

இதன்போது அந்த வீடு சந்தேக நபரின் மாமாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

குறித்த வீட்டில் மறைந்திருந்த சந்தேக நபர் பின் கதவு வழியாக தப்பிக்க முயன்றார், ஆனால் பொலிஸ் குழு வீட்டை சோதனை செய்ததால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

ஆசிரியர், அதிபர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

கஃபூர் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து கடற்படை வீரர் பலி

சதொச ஊடாக நியாயமான விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க கலந்துரையாடல்