தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு நடந்துள்ளதுடன், இது மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
கிளி வைக்கப்பட்டுள்ள கூண்டில் நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோகள் 30 உள்ளதுடன், அவற்றில் ஒன்றே திருடப்பட்டுள்ளது.
கூண்டின் பராமரிப்பாளர் மறுநாள் காலை பணிக்காக சாவியுடன் கூண்டைத் திறக்கச் சென்றபோது, அதைப் பாதுகாக்க நிறுவப்பட்ட பாதுகாப்பு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்து, பின்னர் இது குறித்து மிருகக்காட்சி சாலையின் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையின் போது, கூண்டிலிருந்து நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று காணாமல் போனதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பின்னர், இது குறித்து நிர்வாகம், ஒரு பாதுகாப்பு அதிகாரி மூலம் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதியும் அதே கூண்டில் வைக்கப்பட்டிருந்த நீலம் மற்றும் மஞ்சள் மெக்கோ கிளி ஒன்று காணாமல் போயிருந்த நிலையில், பின்னர் இரத்மலானை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது.