அரசியல்உள்நாடு

இறைதூதர் காட்டிச் சென்ற அதே பொறுமை, அதே தியாகத்தையே காஸா மக்களும் கடைப்பிடிக்கின்றனர் – ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

ஏகத்துவ வேதங்களின் தந்தையான இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்களைச் செய்யாத வரைக்கும், சவால்களை வெற்றிகொள்ள முடியாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புனித ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

“இறையில்லமான கஃபாவைத் தரிசிக்க இலட்சக் கணக்கிலான முஸ்லிம்கள் ஒன்றுகூடியுள்ளனர். ஐயாயிரம் வருடங்களையும் கடந்து நிற்கிறது இறைதூதர் இப்றாஹிமின் முன்மாதிரிகள்.

சமாதானம், சக வாழ்வு மற்றும் சகிப்புத் தன்மைகளுக்கான வழித்தடங்களை நிலைப்படுத்துவதே புனித ஹஜ். இவற்றுக்காக எல்லாவகையான தியாகங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

பிராணிகளைப் பலியிடுவதிலும் பல படிப்பினைகள் புதைந்துள்ளன. ஆசை, ஆத்திரம் மற்றும் அகம்பாவங்களை பலியிடுவதில்தான் ஒருவனிடம் புனிதம் பிறக்கிறது. இந்தப் புனிதத்தைப் போதிக்கவே இப்றாஹிம் நபி பாடுபட்டார். இறைதூதர் இப்றாஹிமின் தியாகங்கள் உலகமுள்ளவரை நினைவுகூரப்படும்.

அன்னாரின் வழித்தோன்றல் வாயிலாக வந்த வேதங்களே யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் என்பவைகள். ஜெரூஸலத்தில் இறைதூதர் இப்றாஹிமிட்ட அடித்தளத்தில்தான், இந்த ஏகத்துவ வேதங்கள் கட்டியெழுப்பப்பட்டன.

இதனால்தான், ஆப்ரஹாம் உடன்படிக்கை மூலம் காஸா, இஸ்ரேல் மோதல்களை முடித்துவைக்க முயற்சிக்கப்படுகின்றது.

இருந்தபோதும், இந்த வேதங்களைப் பின்பற்றும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாதிருப்பது கவலையளிக்கிறது.

காஸாவில் கட்டவிழ்க்கப்பட்டுள்ள கொடூரங்களை நிறுத்த முடியாதளவுக்கு, இந்த ஓரிறை வேதங்களைப் பின்பற்றுவோர் பலவீனமடைந்துவிட்டனரா?

பாரியளவிலான இன்னல்களை எதிர்கொண்ட போதிலும், காஸா முஸ்லிம்கள் மனந்தளரவில்லை. இப்றாஹிம் நபியின் பூமியிலுள்ள இம்மக்கள், இறைவனின் நம்பிக்கையைத் தளரவிடவில்லை. இறைதூதர் காட்டிச் சென்ற அதே பொறுமை, அதே தியாகத்தையே காஸா மக்களும் கடைப்பிடிக்கின்றனர்.

என்றாவது ஒரு நாள் மீட்சியும் வெற்றியும் கிடைக்கும் என்பதே இவர்களின் நம்பிக்கை. இதற்கான காலம் கனிந்துள்ளதைக் கட்டியம் கூறும் வகையிலேயே, பிரான்ஸின் அறிக்கையும் உள்ளது. பலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளமை, காஸாவுக்கான விடியற்பாதைகளைத் திறந்துவிட்டுள்ளன.

திறக்கப்பட்டுள்ள இப்பாதையூடாக உலக முஸ்லிம்களின் இன்னல்கள் நீங்கட்டும்! இலங்கை முஸ்லிம்களும் இந்த நம்பிக்கையில் பெருநாளைக் கொண்டாடுவோம்! ஈத் முபாறக்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு

Related posts

சமூகத்துக்காக உழைத்ததனாலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் மீது இத்தனை எறிகணைகள்

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுக் கொள்ளப் போவதில்லை