ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கலால் சட்டத்தை மீறிய வகையில் புதிய மதுபான அனுமதிப் பத்திரங்களை வழங்கி, நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை (03) விசாரிக்க உயர் நீதிமன்றம் நேற்று (03) தீர்மானித்தது.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிலருக்கு எதிராகவே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த வருடம் ஜூலை 26 ஆம் திகதி முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையிலான இரண்டு மாத காலப்பகுதியில்,இந்த மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இது தொடர்பான தகவல்களையும், 2024 இல் புதிதாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்களின் தகவல்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கலால் ஆணையர் நாயகத்திற்கு உயர் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று இந்த மனு பரிசீலிக்கப்பட்டது.
மாத்தளையைச் சேர்ந்த தங்கவேலு தனேந்திரராஜா உள்ளிட்டோர் தாக்கல் செய்த இந்த மனுவில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கலால் ஆணையர் நாயகம் எம்.ஏ. குணசிறி, மேலதிக கலால் ஆணையாளர் ஏ.எம்.பி. அரம்பல, பிரதி ஆணையர்கள் சி.ஜே.ஏ. வீரக்கொடி, யு.டி.என். ஜெயவீர, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட 39 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.