மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், நீர் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இதனை அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது கூறினார்.
சஜித் பிரேமதாஸ: “IMF இன் அடுத்த தவணைப் பணத்தைப் பெறுவதற்காகவா மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் உயர்த்துகிறீர்கள்? இப்போது நீர் கட்டணமும் உயர்த்தப்படவுள்ளதாகக் கேள்விப்படுகிறோம்.?”
“நீங்கள் எந்த ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இதனைக் கேள்விப்பட்டீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்? உங்களுக்கு நினைவிருக்கலாம், உரிய தரவுகள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே பகிரங்கமாக அறிவிப்புகளைச் செய்வதாக நீங்கள் கூறியிருந்தீர்கள்.
ஆனால், இப்போது நீங்கள் ‘கேள்விப்பட்டேன்’ என்கிறீர்கள். நான் மிகவும் பொறுப்புடன் கூற விரும்புகிறேன், நீர் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று.”