இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி அதிக வாக்குகளைப்பெற்று வெற்றியீட்டியுள்ளது.
இதில் 9 உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டு ஆட்சியை உறுதிப்படுத்திக்கொண்டுள்ள போதும் 4 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகரசபையை ஆளும் தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டிக்கொண்டுள்ளது.
என்றாலும் அவர்களுக்கு அதில் 48 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளபோதும் கொழும்பு மாநகர சபைக்கு போட்டியிட்ட எதிர்க்கட்சிகளுக்கு 69 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் கொழும்பு மாநகர சபையில் தனித்து ஆட்சியை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு முடியாமல் இருக்கிறது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ நகரசபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது.
அதில் அவர்களுக்கு 9ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளபோதும் எதிர்க்கட்சிகளுக்கு 10 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் அங்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கபுர நகரசபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது.
அதில் அவர்களுக்கு 11 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ள போதும் எதிர்க்கட்சிகளுக்கு 14ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் இங்கும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை மாநகர சபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுக்கொண்டுள்ளது. அவர்களுக்கு 26 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் மொத்தமாக 26 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதனால் மொரட்டுவை மாநகர சபையில் ஆட்சியை அமைப்பதிலும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
-எம்.ஆர்.எம்.வசீம்