தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வை கண்டிக்கின்றோம்.
பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்த இந்தியா மீதான பகையுணர்வு இலங்கையின் சர்வதேச உறவுகளை நிச்சயமாக ஆபத்தில் ஆழ்த்தும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (02) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மே முதலாம் திகதி நாடளாவிய ரீதியில் சுமார் 8000 கொத்தனி கூட்டங்களை ஏற்பாடு; செய்தமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுராட்சிமன்ற வேட்பாளர்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மக்களுக்கான எமது அர்ப்பணிப்பினை அவர்களுக்கு நினைவுபடுத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியால் கிராம மட்டத்தில் ஆயிரக்கணக்கான கூட்டங்களை நடத்த முடிந்தது.
அரசியல் கட்சிகளுக்கிடையில் மே தினத்துக்காக மக்களை ஒன்று கூட்டும் போட்டியிட்டுக் கொள்ளும் கலாசாரம் எம்மால் நிறைவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
அதற்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சியானது அரசியல் கட்சியென்ற ரீதியில் எமது செய்தியை கிராம மட்ட மக்களிடம் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் எதிரொலித்த இந்திய எதிர்ப்பு உணர்வையும் ஐக்கிய தேசியக் கட்சி கண்டிக்கிறது.
நமது பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை மக்களுக்கு ஆதரவாக நின்று நமது பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்தது இந்திய அரசுதான்.
ஆளும் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது இந்திய அரசாங்கத்தின் மீது தேவையற்ற தாக்குதல் நடத்தப்படுவது இலங்கையின் சர்வதேச உறவுகளை நிச்சயமாக ஆபத்தில் ஆழ்த்தும் என்றுள்ளது.
-எம்.மனோசித்ரா