குருணாகல் – தம்புள்ளை ஏ6 வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த கெப் வாகனம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் படுகாயமடைந்துள்ள நிலையில் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்புறத்தில் பயணித்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிரியாகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 மற்றும் 43 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த விபத்து தொடர்பில் கெப் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொரட்டியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.