அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும்.
நான் அவ்வாறான பண்புள்ளவள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
புதன்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படுமாயின் அதற்கு பொருத்தமானவள் நான் எனத் தெரிவித்திருந்தேன்.
எனினும் இம்முறை பெண்களுக்கு வழங்குவதில்லை என்று கட்சி தீர்மானித்திருக்கிறது. அதனாலேயே எனக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எவ்வாறிருப்பினும் பதவிகள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் எனது பொறுப்புக்களை நான் நிறைவேற்றுவேன். 2020 இலும் தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் ஓரிரு வாரங்களுக்குள் மீண்டும் எனது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பித்துவிட்டேன்.
தேர்தலில் தோல்வியடைந்ததற்காகவும், தேசிய பட்டியல் ஆசனம் கிடைக்கவில்லை என்பதற்காகவும் நான் துவண்டுவிடப் போவதில்லை.
அரசியல்வாதிகள் நீருக்குள் மூழ்கடிக்கப்படும் பந்தாக இருக்க வேண்டும். கீழே செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் மேலெழ முயற்சிக்க வேண்டும். நான் அவ்வாறான பண்புள்ளவர்.
மக்களுக்காக நான் செய்யும் சேவைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. எனது தோல்விக்கு இதுவும் கூட காரணமாக இருக்கலாம் என்றார்.
-எம்.மனோசித்ரா
