நமது நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (04) புதன்கிழமை, மூதூர் – நெய்தல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஹிழ்று ஜும்மா பள்ளியில் விசேட நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு, நான்கு பாலர் பாடசாலைகளை உள்ளடக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹிழ்று ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம், நெய்தல் நகர் பிரஜா சக்தி அமைப்பு, சமூக நிறுவனங்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் இணைந்து, இந்த நிகழ்வை மிகச் சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடத்தினர்.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, பாலர் பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலைகளிலிருந்து தேசியக் கொடியை ஏந்தியவண்ணம் வீதியினூடாக நடைபயணமாகச் சென்று, விழா நடைபெறும் ஹிழ்று ஜும்மா பள்ளி வளாகத்தை வந்தடைந்தனர்.
இந்த நடைபயணம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
நிகழ்வு ஆரம்பமாக, ரவ்லதுல் ஜன்னா அரபுக் கல்லூரி மாணவரின் கிராஅத் ஓதலுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஹிழ்று ஜும்மா பள்ளி நிர்வாகத்தினர், பிரஜா சக்தி உறுப்பினர்கள், சமூக நிறுவன உறுப்பினர்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
-மூதூர் நிருபர் முஹம்மது ஜிப்ரான்
