கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி தொடர்பான விசேட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டில் 2,700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 2,700 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.
அவர்களில் 2,000 பேர் பாதசாரிகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் என்றும், உயிரிழந்தவர்களில் 53 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விபத்துக்களில் சுமார் 50 சதவீதமானவற்றிற்கு சாரதிகளே காரணம் என தெரியவந்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தும் தமது சாரதிகள் குறித்து பஸ் சங்கங்கள் அதிகளவில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அவர்களில் 60 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் நடமாடும் ஆய்வகங்களைப் பயன்படுத்தி பெஸ்டியன் மாவத்தையில் சுமார் 53 பஸ்களைப் பரிசோதித்தோம். அங்கு 10 சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தனர்.
இதன் மூலம் சாரதிகளில் சுமார் 16 சதவீதமானோர் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரியவந்தது. இருப்பினும் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாகும்.
பரிசோதனை நடத்தப்பட்ட மறுநாள் ஏராளமான சாரதிகள் பணிக்கு சமூகமளிக்காததன் மூலம் அதனை நாம் உணர்ந்துகொண்டோம்.
அவர்கள் நிச்சயமாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள், அதனால்தான் அன்றைய தினம் சோதனைக்கு அஞ்சி பணிக்கு வரவில்லை” என அமைச்சர் விவரித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “இதுவே தற்போதைய நிலைமை. இவர்களில் சிகிச்சை பெற விரும்புவோருக்கு நாம் சிகிச்சை அளிப்போம். ஆனால், அடாவடித்தனமாகச் செயற்பட இடமளிக்கப் போவதில்லை.
தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்போம். இனிவரும் காலங்களில் கனரக சாரதி அனுமதிப்பத்திரம் (Heavy Vehicle License) இருந்தாலும், பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்படமாட்டாது. அதற்கு முறையான பயிற்சியின் பின்னர் விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
அத்தகையவர்களுக்கு மாத்திரமே மீண்டும் பயணிகள் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபட முடியும்” எனத் தெரிவித்தார்.
