வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (28) கூடியதுடன், இதன்போது மேலதிக நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கான முழுமையான அதிகாரம் நிறைவேற்றுச் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கான மருந்துச்சீட்டுகளை எழுதும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும், அரசியல் குழுக்களால் நடத்தப்படும் சுகாதார முகாம்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வைத்தியர்கள் போதுமான அளவு இல்லாத வைத்தியசாலைகளில் புதிதாக நிர்மாணிக்கப்படும் விடுதிகள் மற்றும் பிரிவுகளின் கட்டிடப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.
