நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 52க்கும் மேற்பட்ட நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (20) காலை 9.00 மணி நிலவரப்படி இந்த நிலைமை காணப்படுவதாக அத்திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் குறிப்பிட்டார்.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் வான் பாய்ந்து வருகின்றன:
அம்பாறையில் 9 பிரதான நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்களும்,
அநுராதபுரத்தில் 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 9 நீர்த்தேக்கங்களும்,
பதுளை மாவட்டத்தில் 7 பிரதான நீர்த்தேக்கங்களில் 4 நீர்த்தேக்கங்களும்,
மட்டக்களப்பில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்களும்,
ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் ஒரு நீர்த்தேக்கமும்,
கண்டி மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களும்,
குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்களும்,
மொனராகலையில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்களும்,
பொலன்னறுவையில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்களும்,
புத்தளம் மாவட்டத்தில் உள்ள 2 பிரதான நீர்த்தேக்கங்களும்,
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 பிரதான நீர்த்தேக்கங்களில் 4 நீர்த்தேக்கங்களும்,
வவுனியாவில் ஒரு நீர்த்தேக்கமும் வான் பாய்கின்றன.
குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தற்போது திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்சமாகவே உள்ளது.
இருப்பினும், எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு மாறுபடக்கூடும் என்று நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனவே, குறித்த நீர்த்தேக்கங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்து அதிக அவதானத்துடன் இருப்பது மிக முக்கியம் என எச்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்தார்.
