யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த குழந்தையின் தந்தை இரண்டு திருமணங்களைச் செய்தவர் என்றும், அவர் இரண்டாவதாகத் திருமணம் செய்த மனைவியின் குழந்தைக்கே இந்தக் கொடுமை இழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குழந்தையின் தந்தையும் தாயும் இணைந்து, அக்குழந்தையின் மீது தொடர்ச்சியாகக் கொடூரமான தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் குழந்தையின் உடலில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அந்தக் காயங்கள் மீது மிளகாய்த்தூள் பூசியும், குழந்தைக்குப் பச்சை மிளகாயை உண்ணக் கொடுத்தும் அவர்கள் சித்திரவதை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் சங்கானை பிரதேச செயலகத்தின் கவனத்திற்கு வந்ததையடுத்து, பிரதேச செயலக அதிகாரிகள் இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் நல உத்தியோகத்தர்கள் குறித்த வீட்டிற்குச் சென்றபோது, கணவனும் மனைவியும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
தப்பியோடியவர்களைக் கைது செய்வதற்கும், குழந்தையை மீட்கவும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் பிரதேச செயலக அதிகாரிகளும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-கஜிந்தன்
