எகிப்து-காசா எல்லையில் உள்ள ரஃபா எல்லைக் கடப்பு இன்று திங்கட்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் காசாவிலிருந்து 50 பேர் வெளியேறவும், மற்ற 50 பேர் மீண்டும் தாயகம் திரும்பவும் எதிர்பார்க்கப்படுவதாக எகிப்திய அதிகாரப்பூர்வ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்று திங்கட்கிழமை முதற்கட்டமாக பாலஸ்தீனியர்கள் குழு ஒன்று எல்லைக் கடப்பிற்கு வந்தடைந்ததாக அல்-கஹேரா நியூஸ் (Al-Qahera News) செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக முற்றிலும் மூடப்பட்டிருந்த ரஃபா எல்லைக் கடப்பின் பாலஸ்தீனப் பகுதி, ஞாயிற்றுக்கிழமை (01) முதல் சோதனை அடிப்படையில் செயல்படத் தொடங்கியது.
சுமார் 50 பாலஸ்தீனியர்கள் காசாவிற்குள் நுழைவார்கள் என்றும், அதே நேரத்தில் 150 நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் சிகிச்சைக்காக எகிப்திற்குச் செல்ல உள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எல்லைக் கடப்பு முழுமையாகத் திறக்கப்படுவதற்காக சுமார் 22,000 நோயாளிகள் காத்திருப்பதாக காசா சுகாதார அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
அக்டோபர் 2023-ல் தொடங்கிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மே 2024 முதல் ரஃபா எல்லைக் கடப்பின் பாலஸ்தீனப் பகுதியை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. (AA)
