தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் குறுஞ்செய்தி கட்டமைப்பு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹேக் செய்த பிட்காயின் ரேன்சம் வைரஸ் வாடிக்கையாளர்களுக்கு பணம் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
சமூக ஊடகங்களில் பலர் தங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உத்தியோகபூர்வ குறியீட்டிலிருந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதில், “உங்கள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கணக்கு ஆல்பா குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 1.5 BTC கிடைத்தால் உங்கள் தரவை மீட்டெடுக்க முடியும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிட்காயின் வாலட் முகவரி அடங்கிய குறுஞ்செய்திகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் கட்டணம் மற்றும் முறைப்பாடுகள் புதுப்பிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே இலக்கத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
எந்த தரவு திருடப்பட்டது அல்லது கசிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதிகாரிகள் இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.
எனவே, பயனர்கள் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் எனவும், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாட்டையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.