ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களின் இன்றைய பதவிப் பிரமாணமானது எமது கட்சிக்கு பெருமைக்குரிய தருணமாகும் என்று கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் காத்தான்குடி நகர சபையில் பதவிப் பிரமாணம் செய்யும் இந்நேரம் எமது கட்சியானது எந்தக் கூட்டணியும் அமைக்காது, சுயாதீனமாகவே செயற்பட்டு, இலங்கையில் உள்ள எதிர்க் கட்சிகளுக்கிடையில் உள்ளுராட்சி சபையை கைப்பற்றிய ஒரே கட்சியாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என்பதை பெருமையுடன் நினைவூட்டுகின்றேன்.
இந்த வெற்றிக்கு காத்தான்குடியைச் சேர்ந்த கட்சி போராளிகள் மற்றும் ஆதரவாளர்களினதும் கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா அவர்களினதும் பங்களிப்பு இன்றியமையாதது.
இந்நேரத்தில், பதவிப் பிரமாணம் செய்யும் தவிசாளருக்கும், பிரதி தவிசாளருக்கும், மேலும் எமது கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணியும் செயற்பாடுகளும் வெற்றிகரமாக அமையப் பிரார்த்திக்கின்றேன்- என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-அஸ்லம் எஸ்.மெளலானா