வெளிநாட்டு முகவராண்மை நிறுவனங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொடர்பாக மக்கள் மத்தியில் காணப்படுகின்ற நம்பிக்கையை தகர்க்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படும் திட்டமிட்ட சதி காரணமாக நாட்டின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மை சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச் சங்கத்தின் செயலாளர் திரு மொஹமட் பாருக் மொஹமட் அர்ஷாட் கடந்த ஆண்டுகளுகளுடன் ஒப்பிடும் போது தற்பொழுது வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
இது நாட்டின் அந்நிய செலாவணியின் கையிருப்புக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
“சமூக செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் ஒரு குழுவினர் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை வீழ்த்துவதற்கு முயன்று வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு பல்வேறு வெளித்தரப்புகளிடமிருந்து பெருமளவில் பணம் கிடைப்பதாக தகவல்கள் உள்ளன.
தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மக்கள் மத்தியிலுள்ள நம்பிக்கையை சிதைப்பதற்கு அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஒரு சதி என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.” என அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மையில் அவ்லாறான குழுவொன்று வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதாக தெரிவித்துள்ள அவர் அதுவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைக்கு பாதிப்பேற்படுத்தும் ஒரு முயற்சியே என குறிப்பிட்டார்.
யாதேனுமொரு முறைகேடு அல்லது தவறு செய்துள்ள எந்தவொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராண்மை நிறுவனத்துக்கு, நபருக்கு, உத்தியோகத்தருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது சங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குமெனவும், அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அங்கீகரிக்பகப்பட்ட அல்லது முறையான பொறிமுறை உள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
“எவரேனும் ஒருவர் தவறு செய்திருந்தால் அது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் செயற்பாடொன்று உள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்ற நிறுவனங்களுக்கு சென்று புகார் அளிக்க முடியும். 45 ஆண்டுகளுக்கு மேலாக அந் நடவடிக்கைகள் அவ்வாறே இடம்பெற்றன” அவர் மேலும் தெரிவித்தார்.
அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக பல்வேறு ஆட்களுக்கு இத் துறையை வீழ்த்துவதற்கு இடமளிப்போமானால் 2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ஒத்த நிலைமையொன்று மீண்டும் நாட்டில் ஏற்படக்கூடுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். “ ஆண்டொன்றுக்கு சுமார் 300,000 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்கின்றார்கள்.
அவர்கள் வருமாந்தம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். இத் துறை வீழ்ச்சியடையுமானால் மக்களுக்கு மீண்டும் மின்சாரமின்ளறி வரிசைகளில் நிற்க வேண்டி வரும்” அவர் மேலும் தெரிவித்தார்.