வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர், உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, அந்த பிரிவு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
கொலை தொடர்பாக இன்று (26) காலை கெகிராவ பகுதியில் இரண்டு சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த நேரத்தில் தப்பிச் சென்ற பிரதான சந்தேக நபர், விசேட விசாரணைக் குழுவினர், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், அரச புலனாய்வு சேவை அதிகாரிகள் மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரிகள் குழு இணைந்து மஹரகமவின் நாவின்ன பகுதியில் நடத்திய கூட்டு நடவடிக்கையில் இன்று மாலை கைது செய்யப்பட்டார்.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தக் கொலை தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது.
இதற்காக, தென் மாகாணத்திற் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணம் தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், நிதிக் குற்ற விசாரணை பிரிவின் பணிப்பாளர், குற்ற அறிக்கைகள் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேகச் நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவு பணிப்பாளர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
