வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகரவைக் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், புத்தல – கதிர்காமம் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் குழுவொன்று, குறித்த மோட்டார் சைக்கிளை நேற்று (31) மாலை, அந்த வீதியில் 16 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து கண்டு பிடித்துள்ளனர்.
கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் குறித்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் கெக்கிராவப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்துள்ளது.
இதையடுத்து, அவர்கள் மோட்டார் சைக்கிளை காட்டுப் பகுதியில் போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், அவர்கள் தப்பிச் செல்லும் போது காட்டு யானையின் தாக்குதலுக்கும் இலக்காகி, அதிலிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட குறித்த மோட்டார் சைக்கிளை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
