மக்களை வாழ வைப்பது தான் ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
இந்த வருடம் மட்டும், அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளமையால், உயிர் இழப்புகளும் காயம் ஏற்படும் நிலையும் அதிகமாக நடந்துள்ளன.
பொது மக்கள் தின நடவடிக்கைகள் நடைபெற்று வரும் வேளையிலயே உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூட கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே பொது மக்கள் தினம் நடத்தப்படுகின்றன. இன்று சமூகத்தில் கொலைகளும் திட்டமிட்ட குற்றச் செயல்களும் வெகுவாகவும் சர்வசாதாரணமாகவும் நடந்து வருகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் சரியான வேலைத்திட்டமொன்று இல்லை.
இந்த அரசாங்கத்தின் பலவீனம் காரணமாக, கொலைகாரர்களுக்கும் கொள்ளையர்களுக்கும் குற்றங்களைச் செய்வதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் நேற்று (25) இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதியில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் ஒருவர் பொது மக்கள் தின நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நாளில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை நடப்பதற்கு முன்னர், தனக்கு உயிராபத்து காணப்படுகிறன்றது, பாதுகாப்பு வழங்குமாறு கோரி, பொலிஸ் மா அதிபருக்கு அவர் எழுத்து மூலம் அறிவித்திருக்கிறார்.
ஆனால் பொலிஸார் எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லை. இன்று சமூகத்தில் எங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு மேல் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியாது இருக்கிறது.
நாட்டில் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச்சூடு நடக்கும் என்பதை ஊகிக்கவும் முடியாமலுள்ளது. இந்த நிச்சயமற்ற நிலை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்கான சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான ஆதரவை நாமும் பெற்றுத் தருவோம்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களையும், கொலைகாரர்களையும் கைது செய்து, குற்றச் செயல்களை இல்லாதொழிக்க வேண்டும். கட்டுப்படுத்த வேண்டும்.
அவர்களுக்கு சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கும் நடவடிக்கைக்கு நாமும் எமது ஆதரவைத் தருவோம். இந்தக் கொலைக் கலாச்சாரத்தை முன்னிறுத்தி, எதிர்க்கட்சியை கட்டுப்படுத்த வந்தால், அதற்கு நாம் இடமளியோம். இன்று நாட்டில் ஜனநாயகமோ அமைதி நிலமையோ இல்லாது காணப்படுகின்றன.
இந்த நாட்டை அழிக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளுக்கும், நீதி, நியாயம், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கும் நாம் எமது உட்சபட்ச ஒத்துழைப்பத் தருவோம்.
மக்களுக்கு சேவை ஆற்றுவதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான பாதுகாப்பை பெற்றுக் கொடுக்குமாறும், 220 இலட்சம் மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
