கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இலங்கை பயணி ஒருவர், விமானப் பணிப்பெண்ணை பாலியல் துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதுடைய தென்னாப்பிரிக்க பெண்ணை பாலியல் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் 49 வயது ஆண், கப்பல் தலைவராக பணிபுரிபவர் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (28) துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணித்த விமானத்தில், குறித்த பயணி கடுமையாக போதையில் இருந்த நிலையில், விமானப் பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, பணிப்பெண் உடனடியாக விமானியிடம் தகவல் தெரிவித்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் பொலிஸாரால் குறித்த பயணி கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் போதையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.