வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (04) இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்குச் சென்று பார்த்த போது தனது மகள் சடலமாகக் கிடந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இ. சிந்துஜா (வயது 25) என்ற ஒரு பிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தின் கழுத்துப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டதால் குறித்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் எனப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதேவேளை, பெண்ணின் கணவரும் அவரது இரண்டு வயதான பெண் குழந்தையும் மாயமாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-தீபன்
