இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில் புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960களில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன.
அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்” என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும்.
இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனிதச் சின்னங்கள் இன்று (04) பிற்பகல் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், அங்கு சிறப்பு மத வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புனிதச் சின்னங்கள் ஹுணுபிட்டி கங்காராம விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பின்னர், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசன நிகழ்வை ஆரம்பித்து வைத்து, புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.
அதன்படி, நாளை (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், இதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய-இலங்கை நட்பை வலுப்படுத்தும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்விரத்திற்கு ஜனாதிபதி விசேட நினைவுப் பரிசையும் இதன்போது வழங்கினார்.
ஹுணுபிட்டி, கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர், சிறப்பு நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதிக்கு கையளித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி புனித சின்னங்களை இந்நாட்டிற்கு தரிசனத்திற்காக கொண்டு வருதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையே பரிமாற்றப்பட்டது.
சியம் மகா நிகாயவின் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண. திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Shartse Khensur Rinpoche Jangchup Choeden தேரர், இந்தியாவிலிருந்து வருகை தந்த மதிப்பிற்குரிய மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, உட்பட இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுகளின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
-ஜனாதிபதி ஊடகப் பிரிவு
