பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே 27 அன்று அலரி மாளிகையில் இரண்டு விசேட இராஜதந்திர கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.
தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும் வத்திக்கானுக்கான இலங்கைத் தூதுவர் மற்றும் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் (அப்போஸ்தலிக் தூதுவர்) மான்சிக்னர் பிரையன் உடைக்வேவை (Monsignor Brian Udaigwe) பிரதமர் வரவேற்று, அவரது கடந்த கால சேவைக்கு நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2025 ஆம் ஆண்டின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
அதனைத்தொடர்ந்து பிரதமர் நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸை வரவேற்றார். விவசாயத்துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பெண்களின் அரசியல் பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் விவசாயத்துறையை பலப்படுத்துவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதமர் வலியுறுத்தினார், மேலும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை ஊக்குவிப்பதில் நியூசிலாந்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டார்.
நியூசிலாந்தின் ஆதரவுடன் இலங்கையில் ஒரு புதிய விளையாட்டுப் பாடசாலையை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இத் தூதுக்குழுவில் கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்தின் துணைத் தலைவர் சங்கைக்குரிய மான்சிக்னர் ராபர்டோ லுச்சினியும் இடம்பெற்றிருந்தார்.
நியூசிலாந்து தூதுக்குழுவிற்கு துணைப் பிரதமரின் பணிக்குழாம் தலைவர் கலாநிதி Jon Johansson , துணைப் பிரதமரின் சிரேஷ்ட வெளியுறவு ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான Michael Appleton, நியூசிலாந்து வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் பிரிவு முகாமையாளர் ஜோனா கெம்ப்கர்ஸ், இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் டேவிட் பைன் மற்றும் கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஸ்தானிகர் கேப்ரியல் ஐசக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த இரண்டு சந்திப்புகளிலும் இலங்கையின் பிரதிநிதிகளாக பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுக்கான பணிப்பாளர் இசுரிகா கருணாரத்ன, அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் மேலதிக செயலாளர் சசிகலா பிரேமவர்தன மற்றும் கிழக்கு ஆசியப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய ஆகியோர் கலந்து கொண்டனர்.
-பிரதமர் ஊடகப் பிரிவு