இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே சுமார் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸின் உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இந்த இடம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் திட்டமிடவும், நடத்தவும் ஹமாஸால் பயன்படுத்தப்பட்டது என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை என கூறி ஹமாஸ் நிராகரித்துள்ளது.
ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்திற்குப் பின்னர், லெபனானில் உள்ள நபர்கள் மற்றும் இடங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பெரும்பாலான தாக்குதல்கள் ஹிஸ்புல்லாவை இலக்காகக் கொண்டிருந்தாலும், இஸ்ரேல், ஹமாஸ் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது.
இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.
பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானமை குறிப்பிடத்தக்கது.
