இலங்கையின் வட மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 2018ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக, நாகலந்த கொடிதுவக்கு மற்றும் மலிந்த சேனவிரத்ன ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று (15.10.2025) தள்ளுபடி செய்யப்பட்டது.
ஏழு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கில் பலமுறை நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டதன் பின்னரும் வழக்குத் தாக்கல் செய்தவர்கள் நடைமுறைப்படி வழக்கை முன்னெடுக்காமையால் தீர்ப்பின்றி நீடித்து இவ்வழக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த வழக்கிற்கு சட்ட அடிப்படை எதுவும் இல்லை என்றும், உண்மையான சட்ட காரணங்களுக்காக அல்லாமல் ஊடக கவனத்தை பெறுவதற்காகவே தொடரப்பட்டதாக முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா நீதிமன்றத்தில் வாதிட்டார்.
மேலும் மனுதாரர்கள் தொடர்ந்து வழக்கை முன்னெடுக்கத் தவறியதால் வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கோரியிருந்த நிலையில், அந்த சமர்ப்பிப்பிற்கு இணங்க, இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இவ் ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.
மனுதாரர்களுக்காக வழக்கறிஞர் சுகந்திகா ஆஜராகியதுடன். 1 முதல் 3ஆம் பிரதிவாதிகளுக்காக உப சட்ட மா அதிபர் மனோஹரா ஜயசிங்க ஆஜராகியிருந்தார். பசில் ராஜபக்ஷவுக்காக வழக்கறிஞர் ருவந்த குரே ஆஜரானார்கள்,.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சார்பாக சட்டத்தரணிகளான ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா மற்றும் ஷிபான் மஹ்ரூப் ஆஜரானார்கள்.
நீண்ட நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக எழுந்த இக்குற்ற்சசாட்டு மூலம் அவர் மீது இனவாத அரசியல் மேற்கொள்ளப்பட்டதுடன், வடக்கு மக்களின் மீள் குடியேற்றத்திற்கு எதிராகவும் பல்வேறான இனவாத செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.