சில நாட்களுக்கு முன்பு போலி துப்பாக்கியுடன் கைதான ரெப் பாடகரான ‘மதுவா’ என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 3 ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர்கள் மற்றும் 3 கிலோகிராமும் 500 கிராம் அளவிலான அமோனியா நைதரசன் இரசாயனமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான ரெப் பாடகர் கடந்த ஓகஸ்ட் 25 ஆம் திகதி போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு, கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ரெப் பாடகர், பிடிபனவின் கலஹேனயில் உள்ள வீட்டின் பின்னால் வெடிப்பொருட்களை மறைத்து வைத்துள்ளதாக கஹதுடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, சந்தேகநபரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பின்னர் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொடவில பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கியை திருடியதாக மன்னார் விசேட குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள், மற்றொரு ரெப் கலைஞருடன் வந்து இந்த வெடிபொருட்களை வைத்திருக்குமாறு தம்மிடம் வழங்கியதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.