ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று சனிக்கிழமை (13), 7.4 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 8.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இது மீண்டும் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கத்தின் மையம் பெட்ரோபவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கிக்கு கிழக்கே சுமார் 111.7 கி.மீ (69.3 மைல்கள்) தொலைவில், பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 39 கி.மீ (24 மைல்கள்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
இந்த நிலநடுக்கம், ஜூலை மாதம் ஏற்பட்ட 8.8 ரிச்டர் நிலநடுக்கத்தின் ஒரு அதிர்வு (aftershock) என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஜூலை நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய நில அதிர்வு ஆகும்.
பசிபிக் தட்டு, வட அமெரிக்கத் தட்டுடன் மோதும் குரில்-கம்சட்கா அகழியின் (Kuril-Kamchatka arc) மீது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இரு தட்டுகளும் வருடத்திற்கு சுமார் 80 மில்லிமீற்றர் வேகத்தில் ஒன்றுக்கொன்று நகர்ந்து வருவதால், அந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.