தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று (27) ஆகிய இரு நாட்களில் மட்டும் 37 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமையால் 21 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மோசமான வானிலை காரணமாக 1,729 குடும்பங்களைச் சேர்ந்த 5,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் 23 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், கண்டி, கங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சுமார் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக வீடுகளில் இருந்து பாதுகாப்புக்காக ஒரு வீட்டில் தங்கியிருந்த போது, அந்த வீடு மண்சரிவில் சிக்கியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்களில் மூவரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம் நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவுகள் காரணமாக 6 மரணங்கள் பதிவாகியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
