உள்நாடு

“மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார்”

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹரக பகுதியில் நேற்று  சனிக்கிழமை (23) இடம்பெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் மாற்றம் வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொண்டு 2015 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள்.  நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்துக்குள் மத்திய வங்கியை மோசடி செய்து,பொருளாதார பாதிப்புக்கு வித்திட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அரச தலைவர்களுக்கிடையிலான அதிகார போட்டியால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்பின் பலவீனத்தை அடிப்படைவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாரதூரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்தியவர் யார் என்பதை தான் அறிவேன், நீதிமன்றம் அழைப்பு விடுத்தால் உண்மையை பகிரங்கப்படுத்த தயார் என்று மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இவ்விடயத்தில் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது பொலிஸூக்கு செல்ல வேண்டும் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

பயங்கரவாதம், அரசுக்கு எதிராக செயற்பாடுகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தும் அதனை உரிய தரப்புக்கு அறிவிக்காமல் மறைப்பது 10 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிகடை சிறைக்கு செல்வார்.

69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டு கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபித்தார்கள். இலங்கை அரசியல் வரலாற்றில் கோட்டபய ராஜபக்ஷவை போன்று எவரும் மக்களாணையை காட்டிக் கொடுக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான மக்களாணையை ரணில் விக்கிரமசிங்கவிடமே ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடினோர்.

கோட்டபய ராஜபக்ஷவின் செயற்பாடு வெறுக்கத்தக்கது. சஜித் பிரேமதாச, அனுர குமார திஸாநாயக்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் 69 இலட்ச மக்களாணையை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. 69 இலட்ச மக்களாணையை நாங்களே தோற்றுவித்தோம், ஆகவே நாங்களே 69 இலட்ச மக்களாணைக்கு தலைமைத்துவம் வழங்குவோம் என்றார்.

 

Related posts

ஜனாதிபதி, பிரதமருக்கு தபாலட்டை மூலம் மன்னாரில் கோரிக்கை

editor

உயிர்த்த ஞாயிறு சம்பவம் – 12 பேர் விடுதலை

editor

பல்கலை மாணவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி