ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைப் பிரதேச அமைப்பாளராக தொழிலதிபர் எம்.எச்.எம். சரோ தாஜுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் வழங்கி வைக்கப்பட்டது.
மருதமுனைப் பிரதேசத்தின் கட்சிக் கட்டமைப்பை புனரமைப்பு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று திங்கட்கிழமை (11) இரவு நடைபெற்றது. இதன்போதே இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மருதமுனைப் பிரதேச முன்னாள் அமைப்பாளர் ஏ.ஆர்.ஏ. சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், கல்முனை மாநகர முன்னாள் மேயர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், முன்னாள் பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் மற்றும் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மருதமுனைப் பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
-அஸ்லம்