முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள நிதி மோசடி வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லையென்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர், சி.ஐ.டி.யினர் சுதந்திரமாகச் செயற்படும் அதிகாரத்தைக் கொண்டவர்கள். சட்ட நடைமுறைகளை பின்பற்றவில்லையென்று எதிர்த்தரப்புச் சட்டத்தரணிகள் கருதினால் அதனை அவர்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நீதிமன்றமே எடுக்குமென்பதுடன், ஒவ்வொரு சிறிய விசாரணைக்கும் சட்ட மாஅதிபரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் சி.ஐ.டி. யினருக்கு இல்லையெனக் குறிப்பிட்டார்.
கடந்த 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது லண்டனிலுள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்துக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.
அவரது பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் கௌரவப் பட்டம் பெறும் நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற இந்தப் பயணமானது ஒரு தனியார் பயணமாக இருந்தபோதும், சுமார் 16.6 மில்லியன் ரூபா முதல் 16.9 மில்லியன் ரூபாவரை அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு விசாரணை இடம்பெறுகிறது.
இது தொடர்பாக 2025 ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பின்னர் மருத்துவக் காரணத்துக்காகப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணிகளான திலக் மாரப்பன மற்றும் அனுஜ பிரேமரத்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகளை கடுமையாக சாடியிருந்தனர்.
