அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று (24) இடம்பெற்று வரும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நடத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டலந்த வதை முகாம், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.