முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (01) உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, கொழும்பு, தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தை சுற்றி வீதிகளை மறித்து பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.