முன்னாள் பெற்றோலிய அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
2014 டிசம்பரில் வெள்ள நிவாரணம் வழங்குவதாகக் கூறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 6.1 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தொகையை சட்டவிரோதமாக செலவழித்து, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் லியான் வருஷவிதான முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது,பிரதிவாதிகள் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
அதன்படி, அழைப்பாணை விடுக்கப்படும்போது பிரதிவாதிகள் மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதவான் உத்தரவிட்டார்.
பின்னர், வழக்கு நடவடிக்கைகளை நிறைவு செய்ய உத்தரவிடப்பட்டது.