கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நேற்று (29) கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இருவருக்கும் சிறைச்சாலை உடை (ஜம்பர்) அணிவிக்கப்பட்டு, தூங்குவதற்கு பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், சதொச நிறுவனம் ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கேரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை சட்டவிரோதமாக விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்து, அரசுக்கு 53.1 மில்லியன் ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.
இதன்படி, அந்தக் காலத்தில் சதொசவின் தலைவராக பணியாற்றிய நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுவதாக மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.
இதுதவிர, பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும், மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு, முன்னாள் அமைச்சர்கள் இருவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளுக்கு வழங்கப்படும் “ஜம்பர்” உடை இருவருக்கும் அணிவிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்றைய தினம் (30) அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் பணி வழங்கப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சகப் பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.