யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.
இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.