கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக கடமையாற்றி, கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களை பாராட்டி கெளரவித்து, பிரியாவிடையளிக்கும் விழா நேற்று வியாழக்கிழமை மாலை மாநகர சபை கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கல்முனை மாநகர சபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். மனாஸிர் அஹ்சன், ஆயுள்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி ஜுமானா ஹஸீன் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது கல்முனை மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், பொறியியல் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ரஜினி சயானந்தன், வருமானப் பரிசோதகர் சமீம் அப்துல் ஜப்பார், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மூபீனா அமான், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சி.ஜே. முஹைமினா, சாய்ந்தமருது பொது நூலகத்தின் நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக், ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக் உள்ளிட்டோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.
இதன்போது கடந்த 04 வருடங்களாக கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராக அர்ப்பணிப்புடன் உன்னத சேவையாற்றிய ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களின் ஆற்றல், ஆளுமை மற்றும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இவ்விழாவில் உத்தியோகத்தர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இதன்போது மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ள ஏ.எஸ்.எம். அஸீம் அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு பொறுப்பு உத்தியோகத்தர் ஏ.எம். டிலிட் நெளசாட் விழா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
2019ஆம் ஆண்டு போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம்.அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராகவும் அதனைத் தொடர்ந்து 2022 ஜனவரி முதல் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதன்போது சிறிது காலம் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-அஸ்லம் எஸ். மெளலானா