மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் எனவும் சட்டச் சிக்கல்களை தீர்ப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த 7ஆம் திகதி நூலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் இருக்கிறது.
ஆனால், சில சட்ட சிக்கல்களாலேயே காலந்தாழ்த்தப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டது போன்று மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும்.
கடந்த அரசாங்கங்களே தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இதனால்,மாகாண சபைகளை நடத்துவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படும். புதிதாக எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
முன்னதாக செய்யப்பட்ட எல்லை நிர்ணயத்தில் பல்வேறு தவறுகள் இருந்ததால், பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படவில்லை.
இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாதுள்ளது.
இந்நிலையில், புதிதாக மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது.
அதற்காக புதிய ஆணைக்குழு ஒன்றை நியமித்து, எல்லை நிர்ணயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்வரும் வருடத்தில் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும்.