மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களை இணைக்கும் இளவன்குளம் ஊடாகச் செல்லும் B 379 வீதியை நிரந்தரமாக பொதுமக்களின் போக்குவரத்துக்காகத் திறந்துவிடுமாறு கோரி, ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான பாரிய மகஜர் கையெழுத்திடும் போராட்டமொன்று இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில், பெருமளவிலான பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கும் இந்த வீதி திறக்கப்படுவதன் மூலம் தமது பயண நேரமும், செலவும் கணிசமாகக் குறையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கையெழுத்திடும் நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கையில், “இன்ஷா அல்லாஹ், எமது நீண்டகாலக் கோரிக்கை இந்த மகஜர் மூலம் ஜனாதிபதியின் கவனத்திற்குச் சென்று நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.
