மன்னார் தீவில் காற்றாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழு மன்னார் மாவட்டத்திற்கு இன்று (05) வருகை தந்துள்ள நிலையில் மன்னார் மாவட்ட மக்கள் 35 ஆவது நாளாகவும் தொடர் போராட்டத்தில் மன்னார் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மன்னார் பிரதான சுற்று வட்ட பகுதியில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் காற்றாலை, கணிய மணல் போன்ற அழிவு திட்டங்கள் மன்னார் மாவட்டத்தில் இனியும் வேண்டாம் என்று ஒருமித்த குரலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் யோசேவாஸ் கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர் .
போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சிவப்பு நிற தலைப்பட்டிகளை அணிந்து, பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படும் குறித்த செயல் திட்டங்களுக்கு எதிராக தமது அதிருப்தியை வெளிப்படுத்தி யிருந்தனர்.
அதேநேரம் மன்னார் மாவட்ட மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியா வேப்பங்குளம் கிராம மக்களும் அவர்களுடன் வெப்பங்குளம் பங்குதந்தை ,அருட்சகோதிரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-எஸ்.ஆர்.லெம்பேட்